இலங்கையின் முதன்மையான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வு வழங்குநரான Hayleys Solar, தனது புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, தனது 3MW வியாங்கொடை நிலத்தில் அமைக்கப்பட்ட சூரியமின் சக்தித் திட்டத்தை வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.
இலங்கை முழுவதும் 300MW நிலத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கு Hayleys Solar திட்டமிட்டுள்ள நிலையில், அதன் வரிசையில் வியாங்கொடை திட்டம் முதலாவதாக அமைகிறது. பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இத்திட்டம் எடுத்துக் காட்டுகிறது.
Hayleys Solar நிறுவனமானது, 17 துறைகளில் சுமார் 150 ஆண்டுகால வணிகப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இலங்கையில் பன்முகத் துறைகளில் செயற்படும் Hayleys குழுமத்தின் கீழ் இயங்கும் Hayleys Fentons Limited நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இந்த வியாங்கொடை திட்டமானது, நிலைபேறான புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நீண்டகால அர்ப்பணிப்புக்கு அமைவாக, தமது புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் தடத்தைப் விரிவுபடுத்துவதில் குழுமம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டைப் பிரதிபலிக்கிறது.
அத்தனகல்ல ஓயாவிற்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டம், பலத்த மழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சவாலான சூழல் நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விரிவான மதிப்பீட்டைத் தொடர்ந்து, Hayleys Solar இத்திட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அதிக இடைவெளி மற்றும் பாதுகாப்பு எல்லைகளுடன் கூடிய போதிய உயர்த்தில் அமைக்கப்பட்ட சூரியப்படல தொகுதி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆதரவுகள் மற்றும் பிரத்தியேக கேபிள் அமைப்புகள் மூலம் நெகிழ்வுத் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வலுசக்தி மாற்றத்தில் தனியார் துறையின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, “இலங்கைக்கு பாதுகாப்பான மற்றும் நிலைபேறான வலுசக்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தனியார் துறையின் அதிகப்படியான பங்கேற்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் திறனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு, புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் காலநிலையைத் தாங்கக்கூடிய தீர்வுகள் எவ்வாறு ஒன்றிணைந்து இந்த தேசிய முன்னுரிமைக்கு ஆதரவளிக்க முடியும் என்பதை இத்தகைய திட்டங்கள் நிரூபிக்கின்றன. எமது புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனை வலுப்படுத்தக்கூடிய மற்றும் பசுமையான, மிகவும் நிலைபேறான இலங்கைக்கு பங்களிக்கக்கூடிய இது போன்ற பல முயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம்.” என்றார்.
இது தொடர்பில் Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது சூழலின் யதார்த்தங்களுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை வியாங்கொடை திட்டம் எடுத்துக் காட்டுகிறது. காலநிலையைத் தாங்கக்கூடிய பொறியியல் தொழில்நுட்பத்தை புத்தாக்கமான முறையிலான நிலப் பயன்பாட்டுடன் இணைப்பதன் மூலம், சவாலான தள நிலைமைகளைத் தாங்குவது மட்டுமின்றி, கிடைக்கும் நிலத்திலிருந்து அதிக நன்மைகளை வழங்கும் சூரியமின் சக்தி கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.” என்றார்.

இத்திட்டம் 4,143.36kWp DC திறன் மற்றும் 3MW AC திறனைக் கொண்டுள்ளதுடன், 640W இருமுக (bifacial) சூரியப்படல தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது வருடாந்தம் சுமார் 6,351,770.88kWh பசுமையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சராசரியாக சுமார் 2,700 இலங்கை வீடுகளின் வருடாந்த மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானது என்பதுடன், வருடாந்தம் சுமார் 4,339.53 தொன் காபனிரொட்சைட் (CO₂) வெளியேற்றத்தையும் தடுக்கிறது.
தரை மட்டத்திலிருந்து சராசரியாக சுமார் 2.7 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்த்தப்பட்ட கட்டமைப்பானது, சூரியமின்கல படலங்களுக்கு அடியில் உள்ள நிலத்தையும் உற்பத்தித் திறனுடன் பயன்படுத்த உதவுகிறது. விவசாயம் மற்றும் சூரிய மின்னுற்பத்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு (agrivoltaic) முயற்சியின் ஒரு அங்கமாக, குடைமிளகாய் (Scotch bonnet pepper) மற்றும் கத்தரிக்காய் போன்ற மரக்கறிச் செய்கைக்கு இந்த இடைவெளி உதவும். இது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியுடன் இணைந்து விவசாய உற்பத்தியையும் சாத்தியமாக்குகிறது.
இது குறித்து, Hayleys Fentons Limited நிறுவனத்தின் வலுசக்திப் பிரிவின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் பெரேரா தெரிவிக்கையில், “எமது வியாங்கொடை திட்டமானது புத்தாக்க கண்டுபிடிப்பு உடனான சூரியப்படல வடிவமைப்பு எவ்வாறு ஒரே தளத்தில் இருந்து பல நன்மைகளை வழங்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பானது வெள்ளப் பெருக்கைத் தாங்கும் திறனை அதிகரிப்பதுடன், சூரியப் படலங்களுக்கு அடியில் காற்றோட்டத்தையும் ஏற்படுத்துகிறது. சூரியப்படல இருமுக அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம், வெளியிடப்படும் சூரிய ஒளியை அதிகமாகப் பயன்படுத்த உதவுகிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியும் விவசாயமும் பலனளிக்கும் வகையில் எவ்வாறு ஒன்றாக இயங்க முடியும் என்பதை காட்டுகிறது.” என்றார்.
இந்த வியாங்கொடை திட்டமானது, தூய வலுசக்தி எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், உறுதியான, நிலைபேறான மற்றும் புத்தாக்கமான புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் தீர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான Hayleys Solar நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
குறித்த சூரியப்படல மின்னுற்பத்தி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 011 2 102 102 ஊடாக Hayleys Solar நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது www.hayleyssolar.com இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
Image Caption
300MW தரைத்தள சூரியசக்தி மின்னுற்பத்தித் திட்டத்தின் கீழ் முதலாவது திட்டமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்ட 3MW Hayleys Solar வியாங்கொடை தரைத்தள சூரியசக்தித் திட்டம்.
Hayleys Solar பற்றி
Hayleys Fentons Limited நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar ஆனது, நாட்டின் நிலைபேறான வலுசக்தி வளங்களை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், குடியிருப்பு, வணிக மற்றும் கைத்தொழில்துறை பிரிவுகள் மற்றும் பாரிய அளவிலான திட்டங்களுக்கான சூரியப்படல (PV) கட்டமைப்புகளில் முக்கிய கவனத்தை செலுத்துகிறது. நாடு முழுவதும் 750MWp இற்கும் அதிகமான சூரியப்படல கட்டமைப்புகளை Hayleys Solar பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கையின் சூரியப்படல பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) ஆகிய துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.