டிட்வா வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாடளாவிய ரீதியிலான மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் லயன்ஸ் கழகங்கள்

இலங்கையில் ஏற்பட்ட டிட்வா (Ditwah) வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, லயன்ஸ் கழகங்களின் சர்வதேச அறக்கட்டளையின் (Lions Clubs International Foundation – LCIF) கணிசமான நிதியுதவியுடன், அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக திரட்டப்பட்ட சுமார் 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், Lions International Multiple District 306 அமைப்பானது நாடு முழுவதும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ச்சியாகத் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது.

வெள்ளம் ஏற்பட்ட காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் உள்ள லயன்ஸ் உறுப்பினர்கள் உடனடியாகச் செயற்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்கினர். பல லயன்ஸ் உறுப்பினர்கள் இந்த வெள்ளத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களது சொந்தத் துயரங்களைப் பொருட்படுத்தாது, தொடர்ச்சியான நிவாரணப் பணிகளில் மும்முரமாகப் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லயன்ஸ் கழகங்களின் சர்வதேச அறக்கட்டளையின் (LCIF) பிரதான அனர்த்த மானியத்தின் ஆதரவுடன், லயன்ஸ் அமைப்பானது வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சமூக உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்புத் திட்டங்களை அதன் பின்னர் பொறுப்பேற்று மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை மீள் நிர்மாணம் செய்தல், பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகளை மீளக் கட்டியெழுப்புதல், மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல், வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான சுகாதார வசதிகளை அமைத்துக் கொடுத்தல், சமூக செயற்பாட்டு கட்டடங்கள் மற்றும் பூங்காக்களை புதுப்பித்தல், மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிப்பதற்கான அடிப்படை உபகரணங்களை வழங்குதல் ஆகிய விடயங்கள் தற்போது நிறைவடைந்துள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

லயன்ஸ் அமைப்பின் இந்த மீளக்கட்டமைக்கும் முயற்சிகள், அனர்த்தத்திற்குப் பின்னர் சமூகங்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளின் மீட்சிக்கு பெரும் ஆதரவாக அமைகின்றன. வீடமைப்பு, கல்வி வசதிகள், சுகாதார அணுகல், உள்ளூர் உட்கட்டமைப்புகளை மீளக் கட்டமைப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு உதவுவதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குள் இருக்கும் உடனடித் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது.

பாடசாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டில் விசேட கவனம் செலுத்தி, தற்போது நடைபெற்று வரும் மீட்சிப் பணிகளுக்கு ஆதரவாக மேலதிக நிதியை வழங்குவதற்கும் LCIF உறுதியளித்துள்ளது.

இலங்கையில் அனர்த்த மீட்சிப் பணிகளுக்கான லயன்ஸ் அமைப்பின் நீண்டகால அர்ப்பணிப்பில், டிட்வா வெள்ள நிவாரணப் பணியும் உள்ளடங்குகின்றது. LCIF இன் பெரும்பகுதி பங்களிப்புடனான உதவிகள் மூலம், 2004 சுனாமி பேரழிவு மற்றும் ஏனைய இயற்கை அவசரநிலைகள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அனர்த்தங்களின் போது, லயன்ஸ் அமைப்பினர் நாடு முழுவதும் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லயன்ஸ் உறுப்பினர்களைப் பொறுத்தவரை, வெள்ள நீர் வற்றிய போதிலும் அவர்களது சமூக சேவை முடிந்துவிடுவதில்லை.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *