கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது.
கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளது. ‘Disi Rela’ திட்டத்தின் கீழ் எதிர்கால முயற்சிகளின் ஒரு அங்கமாக, ரூ. 12 மில்லியன் பெறுமதி கொண்ட உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் பிரதேசங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.
‘Disi Rela’ என்பது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும். இது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் உளவுத்தகவல்களை பகிர்ந்தறிதல், மேம்பட்ட உபகரணங்களின் விநியோகம், சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்ற கடல்சார் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடல்சார் பாதுகாப்பை இணைந்து மேற்கொள்கின்றன.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகக் காணப்படும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, “ ‘Disi Rela’ என்பது வெறுமனே தொழில்நுட்பம் அல்லது ரோந்து நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுடனும் ஏற்படும் ஒத்துழைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. எமது கடல்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையருக்கும் பங்கு உள்ளது.” என்றார்.
இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி கருத்து வெளியிட்ட, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy), “ ‘Disi Rela’ திட்டத்தின் இந்த புதிய கட்டமானது, கடல்சார் பாதுகாப்பு எனும் பொதுவான பொறுப்பை எவ்வளவு தீவிரமாக இருநாடுகளும் எடுத்துக் கொள்கின்றன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த புதிய வசதிகள் எமது அடைவுகளை விரிவுபடுத்துவதோடு, இதன் மூலம் எமது பிராந்தியத்தை பாதுகாப்பதிலான அர்ப்பணிப்பைநாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார்.
பொதுமக்கள் கடல்சார்ந்த சந்தேகமான நடவடிக்கைகள் பற்றி தெரிந்தால், 24/7 மணி நேரமும் செயற்படும் 106 எனும் பிரத்தியேக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இந்த கூட்டு முயற்சியானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ரீதியிலான கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தை உருவாக்க உதவுகின்றது.